குஜராத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பலி, 16 பேர் காயம்
குஜராத்தின், வதோதரா மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர்.
இந்த விபத்து நகருக்கு அருகிலுள்ள வாகோடியா வட்டத்தில் அதிகாலை 2.45 மணியளவில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சமஹால் மாவட்டத்தில் பாவகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக வதோதரா காவல் துணை ஆணையர் கரண்ராஜ் வாகேலா தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஐந்து பெண்கள் உள்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 பேரை ஏற்றிச் சென்ற மினி லாரி ஒன்று பின்னால் இருந்து வந்த லாரியுடன் மோதியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வாகேலா தெரிவித்தார்.
மேலும், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். "ஓம் சாந்தி" என்று தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
சூரத்தின் வராச்சாவைச் சேர்ந்த சில குடும்பங்கள் பாவகத், வட்டல் மற்றும் டகோர் (கெடாவில்) கோயில்களைப் பார்க்க மினி லாரி வாடகைக்கு எடுத்திருந்தன என்றார். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.