

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தல் இன்னும் உறுதியாகவில்லை என்று அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
மேலும் இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பெண்கள் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் அம்மாநில அரசு நியமித்துள்ளது. இதனிடையே இது குறித்து பேசிய ஹாத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த், ''அலிகார் மருத்துவமனை அளித்துள்ள மருத்துவ அறிக்கையில் இளம் பெண் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அது பாலியல் வன்கொடுமையால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. முதற்கட்ட மருத்துவ பரிசோதனை அடிப்படையிலேயே பாலியல் வன்கொடுமை என்று கூறினர்'' என்று விளக்கமளித்தார்.
''பாதிக்கப்பட்ட ஹாத்ராஸ் பகுதிக்கு சிறப்பு விசாரணைக் குழுவினர் வருகை புரிந்துள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குற்றம் நடைபெற்ற பகுதியையும் அவர்கள் பரிசோதனை செய்தனர். இது குறித்த கூடுதல் தகவல்களை சிறப்பு விசாரணைக்குழு வழங்கும்'' என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.