ஹாத்ரஸ்: வீட்டுக் காவலில் உ.பி. காங்கிரஸ் மாநிலத் தலைவர்

​ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சந்திப்பதைத் தடுக்க தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லு தெரிவித்துள்ளார்.
ஹாத்ரஸ்: வீட்டுக் காவலில் உ.பி. காங்கிரஸ் மாநிலத் தலைவர்


ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சந்திப்பதைத் தடுக்க தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அஜய் குமார் லல்லு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

"நான் தற்போது வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு, குற்றவாளியைப் போல் நடத்தப்படுகிறேன். ஹாத்ரஸுக்குச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் நீதிக்கு போராடுவதைத் தடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அரசு எந்த அளவுக்கு அச்சத்தில் உள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்காக போராடுவதோ, அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதோ தவறா."

லல்லு தெரிவித்ததன்படி, காவல் துறையினர் நள்ளிரவு 1.30 மணியளவில் அவரது வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். ஹஸ்ரத்கன்ச் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அவரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர் அடுத்த வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று காலை வீட்டு வாசலில் காவலர்களைப் பார்த்திருக்கிறார் லல்லு. அவர் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றபோது காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஹாத்ரஸுக்கு செல்ல காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டும் செல்ல உ.பி. காவல் துறையினர் அனுமதியளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com