

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்போது கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், நவம்பர் 16-ம் தேதி முதல், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பக்தர்களை அனுமதிக்கக் கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மண்டல, மகர விளக்குப் பூஜைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. இந்தாண்டு கரோனா தொற்றை கருத்தில் கொண்டு 10 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பம்பா நதியில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக கோயிலுக்குள் செல்வதற்கு முன்னர் குளிப்பதற்கான அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
பூஜை காலங்களில் தினமும் 1,000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்களுக்கும், விழா காலங்களில் 5,000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வனப்பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கிய பரிசோதனை நிச்சயம் செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.