புது தில்லி: தில்லியில் தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்படும் கரோனா நோயாளிகள் இருக்கும் வீடுகளில் இனி போஸ்டர் ஒட்டப்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா நோயாளிகளின் வீட்டு வாயிலில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் ஏற்படும் சமுதாய அழுத்தங்கள் குறைக்கப்படும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தில்லியில் தற்போது, 12,890 கரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா உறுதி செய்யப்பட்டு, லேசான அறிகுறி உடைய மற்றும் அறிகுறியே இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுமுதல், கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தது. தில்லியில் வியாழக்கிழமை நிலவரப்பாடி 2,726 புதிய கரோனா நோயாளிகளையும் சேர்த்து மொத்த பாதிப்பு 3 லட்சத்தை எட்டிவிட்டது. இதவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,653 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தற்போது கரோனா பாதித்தவர்களின் வீட்டின் வாயிலை அடைத்து தகரம் அடிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாக உள்ளது. அதுபோலவே தில்லியில் போஸ்டர் ஒட்டும் நடைமுறையும் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.