கர்நாடக மாநிலத்தின் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பைரதி பசவராஜாவிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,
செப்டம்பர் 12 ம் தேதி, பசவராஜா, துணை முதலமைச்சர்கள் கோவிந்த் கர்ஜோல், சி.என்.அஸ்வத் நாராயண் மற்றும் எம்.பி. ஜி.எம். சிடேஷ்வர் ஆகியோருடன் தாவங்கேரில் உள்ள ஹரிஹாரா பஞ்சம்சலி மடத்தை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அமைச்சர் பசவராஜாவிற்கு செவ்வாய்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
"நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. ஆனால் எனக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரின் பிரார்த்தனையுடனும் நான் விரைவில் குணமடைவேன் என அமைச்சர் பசவராஜா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.