கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்டி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கர்நாடகத்தில் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அசோக் கஸ்டி கடந்த 2-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
55 வயதான அவர் கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதனிடையே மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில நாள்களாக மூச்சுப் பிரச்சினை காரணமாக அவதியடைந்து வந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் உறுப்புகள் செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.