வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
மும்பையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி இன்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, மும்பை பாந்த்ராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது, இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது, எனவே உடனடியாக எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
கரோனா பரவும் இந்த சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் பாந்த்ரா நோக்கி வருவதாகவும் தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.