

மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு துறையும் இன்று முழு வேகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமா் மோடி, ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவல் காரணமாக, முகக்கவசங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. முகக்கவசம் அணிந்தவர்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல. முகக்கவசங்கள் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளமாக மாறும். நீங்கள் அல்லாது பிறரையும் நோயிலிருந்து பாதுகாக்க விரும்பினால், முகக்கவசத்தைப் பயன்படுத்துவது முக்கியம்.
மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு துறையும் இன்று முழு வேகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன. கரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆற்றிய பங்கை நான் பாராட்டுகிறேன்.
கரோனாவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போரிட http: //covidwarriors.gov.in என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளோம். சமூக அமைப்புகள், உள்ளூர் நிர்வாகத்தின் தன்னார்வலர்கள் இந்த தளத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். 1.25 கோடி மருத்துவர்கள், செவிலியர்கள், என்.சி.சி நபர்கள் இதில் சேர்ந்துள்ளனர். எனவே இதில் இணைவதன் மூலமாக கரோனாவுக்கு எதிரான போரில் நீங்களும் ஒரு வீரராகலாம்.
பொது இடங்களில் எச்சில் துப்புவதன் தீங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும் என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.