
கோப்புப்படம்
உத்தரபிரதேசத்தில் கல்லூரி நிர்வாகத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளான எய்ம்ஸ் மருத்துவ மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் பயின்று வரும் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், 'நான் 2019 டிசம்பரில் கல்லூரியில் சேர்ந்தேன். கரோனா நெருக்கடி காலத்தில், கல்லூரியில் பணியில் இருக்கும்படி நிர்வாகம் கூறியது. அதன்படி, நாங்களும் நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டோம். ஆனால், கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை. ஒரு நாள் காலை கரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க என்னை அழைத்தார்கள். ஆனால், எனக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை' என கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
'என்னைப் போன்று மற்ற மாணவர்களும் அச்சுறுத்தப்பட்டனர். எதிர்ப்பு தெரிவித்ததால் எங்களுக்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டனர். மாறாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் மட்டுமே உணவு வழங்கப்படும் என்று கூறினர். எங்களுக்கு ஊதியமாக ரூ.4,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.