தனிமை மையத்திலிருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு அதிதீவிர கரோனா

பிரிட்டனிலிருந்து தில்லி திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து தப்பித்து சொந்த ஊருக்குச் சென்ற நிலையில் அவருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமை மையத்திலிருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு அதிதீவிர கரோனா
தனிமை மையத்திலிருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு அதிதீவிர கரோனா

விஜயவாடா: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த பெண், பிரிட்டனிலிருந்து தில்லி திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து தப்பித்து சொந்த ஊருக்குச் சென்ற நிலையில் அவருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரிட்டன் சென்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி டிசம்பர் 21-ம் தேதி இரவு தில்லி வந்தடைந்தார். அவரது சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கிருந்து தப்பிய அவர், தன்னை வரவேற்க தில்லி வந்திருந்த மகனுடன் டிசம்பர் 22-ம் தேதி ரயில் மூலம் ராஜமுந்திரி தப்பிவிட்டார்.

அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தாயும், மகனும் தில்லி - விசாகப்பட்டினம் விரைவு ரயிலில் ராஜமுந்திரி வந்து கொண்டிருந்தனர். ரயில் நிலையத்திலேயே அவர்களை பிடித்த சுகாதாரத் துறையினர், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மகனுக்கு கரோனா இல்லை என்று முடிவு வந்தது. எனினும் தற்போது தாயும் மகனும் அரசு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அதே வேளையில் தாயுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தற்போது வரை கரோனா உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இருவரையும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

தாய்க்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது சளி மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி, அவருக்கு அதிதீவிர கரோனா பரவியிருக்கிறதா என்பதை ஆய்வுக்குள்படுத்தினர். அதில் அந்த பெண்மணிக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு வந்த 10 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதனால், உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நம் நாட்டிலும் பிரிட்டனிலிருந்து வந்த சிலருக்கு இப்புதிய ரக தொற்று உள்ளதாக பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு கடந்த சனிக்கிழமை வரை பிரிட்டனிலிருந்து 1,216 போ் வந்துள்ளதாக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. அவா்களில் 1,187 பேரின் விவரங்கள் தெரிய வந்ததை அடுத்து அவா்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 6 பேருக்கு புதிய ரக தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அவா்களின் மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு புணே மற்றும் பெங்களூரில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குண்டூா் மாவட்டத்தில் இருவா், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, அனந்தபுரம், நெல்லூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தலா ஒருவா் ஆகியோருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த 6 பேரின் குடும்ப உறுப்பினா்களில் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவா்களில் 3 போ் குண்டூரிலும், ஒருவா் நெல்லூரிலும் உள்ளனா். ஒட்டுமொத்தமாக, ஆந்திரத்தில் மொத்தம் 10 போ் புதிய ரக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேபோல் லண்டனிலிருந்து ஹைதராபாத் திரும்பிய 20 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com