விஜயவாடா: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த பெண், பிரிட்டனிலிருந்து தில்லி திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து தப்பித்து சொந்த ஊர் வந்தடைந்தார்.
அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அவரது சொந்த ஊரில் சுகாதாரத் துறையினரால் பிடித்து ராஜமுந்திரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரிட்டன் சென்றிருந்த அந்த பெண்மணி டிசம்பர் 21-ம் தேதி இரவு தில்லி வந்தடைந்தார். அவரது சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கிருந்து தப்பிய அவர், தன்னை தில்லியில் வரவேற்க வந்த மகனுடன் டிசம்பர் 22-ம் தேதி ராஜமுந்திரி திரும்பிவிட்டார்.
அவர்களது செல்லிடப்பேசிகளும் அணைக்கப்பட்டுவிட்ட நிலையில், கடவுச் சீட்டு முகவரியை அடிப்படையாக வைத்து அவர்களது வீட்டுக்கு சுகாதாரத் துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், தாயும், மகனும் தில்லி - விசாகப்பட்டினம் விரைவு ரயிலில் ராஜமுந்திரி வந்தடைந்துவிட்டனர். ரயில் நிலையத்திலேயே அவர்களை பிடித்த சுகாதாரத் துறையினர், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தாய்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது சளி மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி, அவருக்கு அதிதீவிர கரோனா பரவியிருக்கிறதா என்பதை ஆய்வுக்குள்படுத்தியுள்ளனர்.