லடாக் விவகாரத்தில் யாரோ ஒருவர் பொய் சொல்கிறார் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புது தில்லி: லடாக்கில், சீனப் படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார், ஆனால், லடாக் பகுதி மக்களோ தங்கள் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். எனவே லடாக் விவகாரத்தில் யாரோ ஒருவர் பொய் சொல்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சுட்டுரையில், "லடாக் மக்கள் கூறுகிறார்கள், சீனா எங்களது நிலங்களை அபகரித்துவிட்டது. பிரதமர் சொல்கிறார்... யாரும் நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. இரண்டும் வெவ்வேறாக இருப்பதால், யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பை சீனப் படைகள் ஆக்கிரமித்துவிட்டதாக லடாக் பகுதியில் வாழும் சிலர் கூறும் விடியோவையும் ராகுல் காந்தி சுட்டுரையில் இணைத்துள்ளார்.
லடாக்கில் இந்திய - சீனப் படையினரிடையே நேரிட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் எல்லையில் தற்போதையை நிலையை ஆராய பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதிக்குச் சென்றிருக்கும் நிலையில், ராகுல் மேற்கண்ட குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.