புது தில்லி: கான்பூரில் எட்டு காவலர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது, உத்தரப்பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடப்பதற்கு மற்றுமொரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்தப்பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடப்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். எங்கே காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையோ அங்கு பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? சுட்டுக் கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன் என்று ராகுல் காந்தி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காவலர்கள் மீது ரௌடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உள்பட மொத்தம் 8 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பிரபல ரவுடி விகாஸ் துபேயை பிடிப்பதற்காக காவலர்கள் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.