சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா

மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டபோது குடியரசுத் தலைவர் அமைதி காத்தது ஏன்? - மம்தா பானர்ஜி

News image
மம்தா பானர்ஜி- PTI
Updated On :7 மார்ச் 2026, 3:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டபோது குடியரசுத் தலைவர் அமைதி காத்தது ஏன்? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார்ச் 7) கலந்துகொண்டார். ஆனால், அந்நிகழ்ச்சியானது ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.

இந்த தீடீர் மாற்றம் அரசியல் விவாதமாக மாறிவிருக்கிறது. அதற்கான காரணம் என்னவாயின், நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றதாகவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமெனவும் பரவலாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குடியரசுத் தலைவரின் வருகையின்போது, அவரை வரவேற்க மமதா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்தவொரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவையனைத்தையும், நிகழ்ச்சியில் மேடையேறிய குடியரசுத் தலைவர் தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழ்ச்சிக்கு வருகை தந்த பழங்குடியின மக்களிடையே பேசுகையில், “வழக்கமாக, குடியரசுத் தலைவர் வருகையின்போது, மாநில முதல்வர் நேரில் சென்று வரவேற்பதும், உடன் பிற அமைச்சர்கள் இருப்பதுமே வழக்கமாகும். ஆனால், அவர் (மம்தா) வரவேற்க வரவில்லை. ஆளுநரும் மாற்றப்பட்டிருப்பதால், அவரும் வரவில்லை; பரவாயில்லை.

எனினும், நிகழ்ச்சிக்கான நாள் குறிக்கப்பட்டு திட்டமிடப்பட்டுவிட்டதால் நான் இங்கு வருகை தந்திருக்கிறேன். இங்கு வருகை தந்துள்ள உங்களுக்கு நன்றி.

இந்நிகழ்ச்சியானது, அங்கு (பிதாநகரில்) நடைபெற்றிருப்பின், சிறப்பாக அமைந்திருக்கும். அங்கு போதுமான அளவுக்கு இடவசதி உள்ளது. இதனால் மக்கள் பலர் வருகை தந்திருக்க முடியும்.

ஆனால், மாநில அரசு நிர்வாகம் அங்கு நிகழ்ச்சி நடத்த ஏன் அனுமதி அளிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இன்று நிகழ்ச்சி நடைபெற்ற இடம், மக்கள் அணுகவும் எளிதில் வருகை தர முடியாதளவுக்கான ஒரு பகுதியாக உள்ளது.

ஒருவேளை, பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் வேண்டாமென மாநில அரசு நினைக்கிறதா? அதனால்தான் அந்த மக்கள் இங்கு வரக்கூடாதென தடுக்கப்பட்டார்களோ?

மம்தா பானர்ஜி எமது இளைய சகோதரி போன்றவர். நானும் வங்கத்தின் ஒரு புதல்விதான். ஆனால், என்னை இங்கு வர அனுமதிக்காதது ஏன் என எனக்குத் தெரியவில்லை?

அவர் (மம்தா) குழப்பத்தில் கவலைப்பட்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை. அதனால்தான் நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டதா? பரவாயில்லை இருக்கட்டும்” என்று பேசினார்.

இதனைத்தொடர்ந்து, இதற்கு எதிர்வினையாக மம்தா பானர்ஜி அளித்துள்ள பதிலில், “முதலில், இந்நிகழ்ச்சி மாநில அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல. இதன் ஏற்பாட்டாளர்கள் யார் எனத் தெரியவில்லை. நீங்கள் ஆண்டுக்கொருமுறை வருகை தந்தால் நாங்கள் வரவேற்கத் தயாராகவிருக்கிறோம். ஆனால், தேர்தல் காலத்தில், தொடர்ச்சியாக நீங்கள் வருகை தந்தால் அனைத்துக்கும் என்னால் எப்படிச் செல்ல முடியும்? உங்களை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருப்பதுதான் எங்களுக்கான பணியா?

மக்களின் உரிமைக்காகவும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளிலும் நான் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இவையே எமது முதன்மைப் பணிகளாகும்.

காவிக் கட்சியானது பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியினரின் உரிமைகளை எப்படிப் பறிக்கிறது? என்பதைப் பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் (குடியரசுத் தலைவர்) இருக்கிறீர்களா?

குடியரசுத் தலைவர் முர்மு, பழங்குடியினரைப் பற்றி பேசும் அதேவேளையில், மணிப்பூரிலும் பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் பழங்குடியின மக்கள் துன்புறுத்தப்பட்டு இன்னல்களுக்கு ஆளானபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?

நாங்கள் மாண்புமிகு குடியரசுத் தலைவரை மதிக்கிறோம். ஆனால், அவரும்கூட, அரசியல் செய்ய இங்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மிகுந்த வருத்தத்துடனே இதைச் சொல்கிறேன்.

உங்கள் (குடியரசுத் தலைவர்) மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது. ஆனால், நீங்கள் பாஜக கொள்கைகளாலும் அறிவுரைகளாலும் வழிநடத்தப்பட்டுகிறீர்கள்” என்று மம்தா பானர்ஜி பேசினார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “மேற்கு வங்க அரசின் நடவடிக்கைகளால் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவமதிப்பு எனவும், குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.