புது தில்லி: மற்ற நபர்களை விடவும் புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கரோனா எளிதில் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கரோனா தொற்று பாதித்தால் நோய் தீவிரமாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்திருந்த நிலையில், தற்போது, புகைப்பழக்கத்தால் கரோனா எளிதில் பரவுகிறது என்று புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதாவது, புகைப்பழக்கத்தால், கையில் தொற்றிய கரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்.. கரோனா தொற்றுக்கு பலியாவோர் விகிதம் இந்தியாவை விட குஜராத்தில் அதிகம்
ஒரு நபர் பொது வெளியில் இருக்கும் போது அவரது கையில் கரோனா வைரஸ் தொற்றிக் கொண்டால், மற்றவர்களை விட, புகைப்பழக்கம் இருப்பவர்கள் புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும். இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோர், ஆங்காங்கே எச்சில் துப்பும்போது அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.