தில்லியில் சமூகப் பரவல் உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தலைநகரான தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தில்லியில் சமூகப் பரவல் உள்ளதா என்பது குறித்து சமீபத்தில் தில்லி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளின் தரவுகளின் அடிப்படையில் தில்லியில் சமூகப் பரவல் இருப்பதை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா உறுதி செய்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால், சமூகப் பரவல் குறித்த அறிவிப்பை தில்லி அரசு வெளியிட முடியாது, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடும், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், 'மக்களிடையே தொற்று எவ்வாறு பரவுகிறது என்று தெரியாதபோது அதனை சமூகப் பரவல் என்று நாங்கள் கூறுகிறோம். இதனடிப்படையில் பல நோயாளிகள் வந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது' என்று தெரிவித்தார்.