
புது தில்லி: பிரதமர் மோடியை ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்துப் பேசியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தினார்.
ஜோதிராதித்ய சிந்தியாவை சமாதானப்படுத்தி கட்சியில் நிலைக்க வைப்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்தார்.
மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் உடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று அவர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 114 உறுப்பினா்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜவாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் என்று கூறப்படும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, முதல்வர் பதவி வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மாநிலங்களவைப் பதவி அவருக்குக் கிடைப்பதிலும் சிக்கல் நீடித்ததால், மேலும் அதிருப்தி அடைந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கேற்ப, அவர் இன்று புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...