மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிா்கொண்டுள்ளது. இதையடுத்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 918 பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கரானாவுக்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இங்கு இன்று மட்டும் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 26 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே மகாராஷ்டிரத்தில் உள்ள அரசு மருத்துவமனையான நாயுடு மருத்துவமனையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியரை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்.