மும்பையில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 278 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 278 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது. இதில் 473 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,177 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கரோனா தொடர்பான நடவடிக்கைகளின் போது பணியிலிருந்த 86 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் காவல்துறை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு வீதிகளை மீறிச் செயல்பட்ட 22,543 பேரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 69,046 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5,19,63,497 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, மகாராஷ்டிரத்தில் இதுவரை 41,642 கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 11,726 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று நோய்க்கு 1,454 பேர் பலியாகியுள்ளனர்.