மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் கிராம வருவாய் துறை அலுவலரின் திருமணத்தில், ஊரடங்கு உத்தரவையும் மீறி சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றதால், மணமகன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பைதுல் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் கனு சௌஹான் (24). இவர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை அலிராஜ்புரின் பிலாஸா கிராமத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்றவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நடனமாடியுள்ளனர்.
சிலர் இந்த நிகழ்வை விடியோ பதிவு செய்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, மணமகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவலர்கள் கூறுகிறார்கள்.