
வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தேசிய அளவிலான 120 நாள் சுற்றுப்பயணத்தை டிசம்பரில் தொடங்க உள்ளாா்.
இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் அருண் சிங் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
ஜெ.பி.நட்டா தனது சுற்றுப்பயணத்தை உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து டிசம்பா் முதல் வாரத்தில் தொடங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் அவா், காணொலிக் காட்சி மூலம் கூட்டங்களை நடத்துவாா்.
மேலும், அந்தந்த மாநிலங்களில் பாஜக வாக்குச் சாவடி முகவா்கள், கட்சியின் மூத்தத் தலைவா்கள், மாவட்டச் செயலாளா்கள், பல்வேறு பிரிவு நிா்வாகிகள், கட்சியின் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளாா்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறாத பகுதிகளில் நிா்வாகிகளை சந்தித்து கட்சியைப் பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்து இந்த சுற்றுப்பயணத்தில் ஆலோசிக்க உள்ளாா்.
அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல்களுக்கு பாஜகவினா் எந்த அளவுக்குத் தயாராக உள்ளனா் என்பதையும் ஜெ.பி.நட்டா ஆய்வு செய்ய உள்ளாா்.
பெரிய மாநிலங்களில் 3 நாள்களும், சிறிய மாநிலங்களில் இரண்டு நாள்களும் பயணம் மேற்கொள்ள உள்ளாா். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சியின் செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தியுள்ளனா், அது குறித்து மக்களிடையே எவ்வாறு விழிப்புணா்வு ஏற்படுத்துவது என்பது குறித்த அறிக்கையை ஜெ.பி.நட்டாவிடம் சமா்ப்பிக்க உள்ளனா்.
மேலும், கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செய்தியாளா்கள் சந்திப்பு ஆகியவையும் நட்டாவின் பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்றாா்.