திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புன்னப்பாக்கம் ஏரியில் அண்மையில் சவுடு குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் ஏரியிலிருந்து சவுடு மண் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது. லாரிகளில் மண் ஏற்றப்படுவது குறித்துத் தகவலறிந்த கிராம மக்கள் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கிராம ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் சரிந்து குடிநீர், விவசாயம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகப் புகார் தெரிவித்தனர். கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
குவாரி செயல்பட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசாரிடம் குவாரி செயல்படக் கூடாது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து லாரிகளில் ஏற்றப்பட்ட சவுடு மண் எறியிலேயே கொட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரிகளையும், பொக்லைன் இயந்திரங்களையும் ஏரியிலிருந்து கிராம மக்கள் விரட்டியடித்தனர்.