அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக ராஜஸ்தான் மாநில பள்ளிக்கல்வித்துறை புதன்கிழமை அறிவித்தது.
அதேசமயம் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.