கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்ற 30 சாதுக்களுக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹரித்வார் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி மருத்துவர் எஸ்.கே. ஜா கூறுகையில், ஹரித்வாரில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 30 சாதுக்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கும்பமேளா நடைபெறும் ஹரித்வாரில் பல்வேறு மருத்துவக் குழுவினர், அங்கிருக்கும் சாதுக்களுக்கு தொடர்ந்து கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஹரித்வாரைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படும்போது அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையே, மத்தியப் பிரதேச மாநிலம் சித்திரக்கூடத்திலிருந்து ஹரித்வாரில் நடைபெறும் கும்ப மேளாவில் பங்கேற்க வந்த மகா நிர்வாணி அகாரா தலைவர் கபில் தேவ், கரோனா பாதித்து டேஹ்ராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கும்பமேளா தொடங்கி கடந்த 5 நாள்களில் மட்டும் ஹரித்வாரைச் சேர்ந்த 2,167 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முறைகளில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து நாள்களில் சுமார் 48.51 லட்சம் பேர் கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடியிருப்பார்கள் என்கிறது புள்ளி விவரம்.