பஞ்சாபில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், சிரோமணி அகாலி தள கட்சியைச் சேர்ந்த 5 தலைவர்கள் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
பஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி என நான்குமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அகாலி தளம் மகளிரணியின் முன்னாள் பொதுச்செயலர் அமன்ஜோத் கௌர் ரமூவாலியா, குர்பிரீத் சிங் ஷாபூர், சந்த் சிங் சத்தா, பல்ஜிந்தர் சிங் தகோஹா மற்றும் ப்ரிதம் சிங் உள்பட 5 பேர் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாஜக மேலிடப் பொறுப்பாளர் துஷ்யந்த் கௌதம், தேசியப் பொதுச்செயலர் தருண் சுக் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் ஷெகாவத் தெரிவித்தது:
"பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த தலைவர்கள் கட்சியில் இணைந்திருப்பது காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதையே காட்டுகிறது. சில கட்சிகள் தங்களுடைய அதிகாரப் பசிக்காக விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகின்றன."
முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலி தளம், வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் அதிருப்தியடைந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கூட்டணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.