நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரது தொலைபேசிகள் ஒட்டிக் கேட்கப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதையடுத்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 19 முதல் தொடர்ந்து 10 நாள்களாக இந்த பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று: மு.க.ஸ்டாலின்
இதுகுறித்து பாட்னாவில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியது,
“நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களில் வெளிவருவது மூலம் தான் மக்கள் அறிவார்கள். ஆகையால், பெகாஸஸ் விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிய நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பத்தை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க விசாரணை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இந்த விவகாரத்தை விவாதிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
பெகாஸஸ் விவகாரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சியினரே விவாதிக்க கோருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.