உத்தரப்பிரதேசத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்துக் கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மொராதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசியதாவது:
மாநிலத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும். 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். அனைத்து மாநிலங்களிலும் உற்பத்தி தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு பிரதமர் எந்தவித மரியாதையும் செலுத்தவில்லை.
கரும்பு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய 4000 கோடி ரூபாய் இருந்தால் போதுமானது. மோடியின் தனி விமானத்திற்கும் ரூ. 8,000 கோடி, நாடாளுமன்றத்தை அழகுபடுத்த ரூ. 20,000 கோடி செலவிடுகிறார்கள், ஆனால் உங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை.