புது தில்லி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங். இவர் தேஜஸ் விமான விபத்தை தவிர்த்ததற்காக, சௌரிய சக்ரா விருது பெற்றவர்.
வெலிங்டனிலிருக்கும் ராணுவ மருத்துவமனையில் தற்போது தீக்காயங்களுடன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் வருண் சிங். இவர் உயர் சிகிச்சைக்காக புது தில்லி கொண்டு செல்லப்படுகிறார்.
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் உள்பட 13 நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியாகினர்.
இதையும் படிக்க.. டேஹ்ராடூனில் வீடு கட்டத் தொடங்கிய விபின் ராவத்
உயிர்காக்கும் கருவியின் உதவியோடு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருண் சிங்கின் உயிரைக் காக்க, அனைத்துக்கட்ட முயற்சிகளும் நடந்து வருவதாக, நாடாளுமன்றத்தில் இன்று விபத்து குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
மிக முக்கிய அதிகாரியை வரவேற்கும் பணி என்பதால், விபின் ராவத்தை வரவேற்க ராணுவ தொடர்பு அதிகாரியாக, குரூப் கேப்டன் வருண் சிங் இந்த ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். விபின் ராவத்தை, வருண் சிங், சூலூர் சென்று வரவேற்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் வந்து கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து நேரிட்டது.
குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இவர் பயிற்சியாளராக சேவையாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தேஜஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை தனது தனித்திறமையால் சரி செய்து, பெரும் விபத்தைத் தவிர்த்ததற்காக, இவருக்கு உயரிய விருதான சௌரிய சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான மிக இக்கட்டான சூழ்நிலையால், தீவிர உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்த போதிலும், அவர் முன்மாதிரியாகத் திகழ்ந்து, மிக பொறுமையுடன் செயல்பட்டு, விமானத்தை மீட்டெடுத்தார், அதன் மூலம் தனக்கென இருக்கும் தனித்திறனை அவர் வெளிப்படுத்தினார் என்று விருது வழங்கும்போது மேற்கோள் காட்டப்பட்டது.