
தில்லியில் மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி இருவரது உடல்களும் இன்று மாலை தகனம் செய்யப்பட இருக்கிறது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இவர்களின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று(டிச.9) அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் சூலூரிலிருந்து நேற்று மாலை ராணுவ விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தில்லி பாலம் விமான தளத்தில் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தற்போது இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். அஞ்சலிக்கு பிறகு விபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் சாலை வழியாக தில்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.