/

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் குறித்து...

News image

அமெரிக்க தாக்குதலில் ஈரானில் இறந்த பள்ளிக் குழந்தைகளுக்காக நடைபெற்ற பேரணியில்... - ஏபி

Updated On :7 ஏப்ரல் 2026, 2:58 pm

ஈரானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்பதைக் குறிப்பிடும் வகையில், இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ள நிலையில், இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ராணுவ நிலைகள், மின் நிலையங்கள், அடுக்குமாடி கட்டடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டாம்

ஈரானுக்குள்ளான அல்லது ஈரானின் எல்லையைக் கடக்கும் இடங்களை நோக்கிய எத்தகைய நகர்வும், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தெளிவான வழிகாட்டுதலைப் பெற்ற பின்னர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ஈரானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்புகொண்டு பேசுவதற்கு தூதரகத்தின் சார்பில் அவசர உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

அவசர உதவி எண்கள்: +98 912 810 9115, +98 912 810 9102, +98 912 810 9109, +98 993 217 9359.

மின்னஞ்சல் : Email: cons.tehran@mea.gov.in

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தியதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு கெடு விதித்திருந்தார். இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து, தனது தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனக் கூறியிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், செவ்வாய்க் கிழமை ஈரானின் மின் சக்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த ஈரான், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியது.

அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், ஈரானின் இரண்டு மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து தாக்கியது. இதில் ஈரானின் 85 சதவிகித பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி திறன் அழிந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் என்ற பெயரைப் பயன்படுத்தாமல், இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, அது மீண்டும் திரும்ப உயிர்ப்பெறாது என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் இன்று (ஏப். 7) பதிவிட்டுள்ளதாவது:

''இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது; அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. அது நிகழ நான் விரும்பவில்லை என்றாலும், அநேகமாக அதுவே நடக்கும்.

இருப்பினும், இப்போது ஒரு முழுமையான ஆட்சி மாற்றத்தை அடைந்திருப்பதால், அங்கு மாறுபட்ட, அதிக அறிவுக்கூர்மை கொண்ட மற்றும் தீவிரவாதச் சாய்வற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன.

ஒருவேளை புரட்சிகரமான வகையில் அற்புதமான ஏதேனும் நிகழக்கூடும்; யாருக்குத் தெரியும்? உலக வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்றிரவு, அதற்கான விடையை நாம் அறிந்துகொள்வோம்.

47 ஆண்டுகால ஊழல் மற்றும் மரணங்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறது. ஈரானில் உள்ள மக்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் இத்தகைய பதிவால் மேற்கு ஆசியாவில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

Summary

Iran-US-Israel War Indian nationals who are currently in Iran advised to stay in Indian Embassy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.