உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த குற்றச்சாட்டில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் உள்ளார். இதனிடையே, அவர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், சிறையில் உள்ள மகன் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, அவர் பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கை கடிந்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தின் விடியோ தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "இம்மாதிரியான முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். நீங்கள் என்ன பைத்தியமா?" என அஜய் மிஸ்ரா பத்திரிகையாளரை திட்டியுள்ளார்.
ஆஷிஷ் மிஸ்ரா மீது புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய குற்ற பத்திரிகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதே என பத்திரிகையாளர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, திடீரென பத்திரிகையாளரை தாக்குவதற்காக அவர் தாவி குதித்துவந்து, மைக்கை பிடுங்கியுள்ளார். பின்னர், மைக்கை நிறுத்து என்று கத்தியுள்ளார்.
இதையும் படிக்க | லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு
பின்னர், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய அவர், பத்திரிகையாளர்களை திருடர்கள் என கூறினார். சிறையில் உள்ள ஆஷிஷ் மிஸ்ராவை அஜய் மிஸ்ரா நேற்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து. லக்கிம்பூர் கெரியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை திறக்கவந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பது திட்டமிட்ட சதி என சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு மத்தியில், மத்திய அமைச்சரவையிலிருந்து அஜய் மிஸ்ரா நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
காரை வேகமாக ஓட்டியது, கொலை முயற்சி, காயம் ஏற்பட வேண்டும் என உள்நோக்கத்துடன் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு எதிராக சேர்க்கப்பட்டுள்ளது.