நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தில்லி நகரின் பெரும்பாலான இடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காஜிப்பூர், திக்ரி உள்ளிட்ட பகுதிகளில் போராடி வரும் விவசாய சங்கங்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 80 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே வேளாண் சட்டத்திற்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்தும் வகையில் இன்று (பிப்.18) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் யூனிடட் கிஷான் முன்னணி அமைப்பினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிகாரில் ஜன் அதிகார் கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் அமைந்துள்ள ரயில் சந்திப்புகளில் விவசாயிகள் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தில் குவிந்த விவசாயிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தையொட்டி முக்கிய ரயில் நிலையங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்வே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.