மகாராஷ்டிரத்திலிருந்து வருபவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழை சமர்பிப்பதை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அந்தப் பரிசோதனை 72 மணி நேரத்துக்குள்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2 வாரங்களில் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்திலிருந்து வந்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பணிபுரிபவர்கள் அவரவர் சொந்த செலவில் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டி. சுதாகர் கூறியது:
"கேரளத்தில் சராசரியாக நாள்தோறும் 4,000 முதல் 5,000 கரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. மகாராஷ்டிரத்தில் சராசரியாக நாள்தோறும் 5,000 முதல் 6,000 கரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. இந்த 2 மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்கிறோம். இந்த மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை சமர்பிக்காவிட்டால் அவர்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன."