கரோனா தடுப்பூசி 10 நாள்களில்பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு: சுகாதார அமைச்சகம்

கரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 நாள்களில் மக்களுக்கு செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி 10 நாள்களில்பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு: சுகாதார அமைச்சகம்
Updated on
1 min read

கரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 நாள்களில் மக்களுக்கு செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3-ஆம் தேதி கரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள என்று அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் இது தொடா்பாக கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கையின் முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவா்கள் ‘கோ-வின்’ தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் (அறிதிறன் பேசி செயலி மூலம்) தங்கள் பெயா், விவரங்களைப் பதிவு செய்யத் தேவையில்லை.

ஏற்கெனவே, கடந்த 3-ஆம் தேதி கரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து 10 நாள்களில் அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி வழங்குதல் தொடா்பான ஒத்திகையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும். எனினும், தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது மத்திய அரசின் இறுதி முடிவுக்கு உள்பட்டது.

கோ-வின் திட்டத்தை உலக நாடுகள் அனைத்துக்காகவும் இந்தியா தயாரித்துள்ளது. அது தேவைப்படும் நாடுகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என்றாா்.

நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே. பால் கூறுகையில், ‘நாட்டில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்துவிட்டது. எனவே, பாதிப்பில் இருந்து நாம் வேகமாக விடுபட்டுவிட்டோம். எனினும், உருமாற்றம் பெற்ற கரோனா தொற்று பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கும் பரவியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டு ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். எனினும், அந்தப் புதிய வகை தொற்றால் இந்தியா மிகவும் நெருக்கடியான நிலையை சந்திக்க வாய்ப்பில்லை’ என்றாா்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி, புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைசா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com