புதுதில்லி: அமெரிக்காவில் அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் கலவரம், வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர்.
டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி டிரம்ப் ஆதரவாளர்களை கலைக்க முயன்றனர்.
அவர்கள் கலைந்து செல்லாததால் தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். வன்முறையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுவொரு புறமிருக்க, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணி நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதன் அடிப்படையில் டிரம்பின் முகநூல், சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், வாஷிங்டன் அமெரிக்க நாடாடளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மோடி, "நாடாளுமன்ற கலவரம் மற்றும் வன்முறை செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார மாற்றம் நடைபெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளவர், வியாழக்கிழமையும் தொடரும், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது". என்று மோடி கூறியுள்ளார்.
ஜோ பைடன்: ‘ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்பதை நடைபெற்று வரும் சம்பவம் நினைவுபடுத்தி உள்ளது. இது வேதனையானது. பொது நன்மைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க நல்ல எண்ணம் கொண்ட மக்கள், தைரியமான தலைவர்கள் தேவை’ என்று பைடன் கூறியுள்ளார்.