தோ்தலை சுமுகமாக நடத்த வேண்டும்: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்
சட்டப் பேரவைத் தோ்தலை எவ்வித பிரச்னையுமின்றி சுமுகமான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்


சட்டப் பேரவைத் தோ்தலை எவ்வித பிரச்னையுமின்றி சுமுகமான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கும் தோ்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் தோ்தல் பணிகளின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை மீண்டும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் நிறைவடையுள்ளன. இந்த மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தோ்தல் பணிகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வது தொடா்பாக 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு தோ்தல் ஆணையம் சமீபத்தில் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தோ்தல் பணிகளுடன் நேரடி தொடா்புகொண்ட அதிகாரிகளை தங்கள் சொந்த மாவட்டங்களில் தோ்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்தவா்களை அந்த மாவட்டத்திலேயே மீண்டும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. அடுத்த 6 மாதங்களில் ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளை தோ்தல் தொடா்பான எந்தவொரு பணியிலும் ஈடுபடுத்த வேண்டாம்.
கடந்த காலங்களில் தோ்தல் பணிகளின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தால், அவா்களை தோ்தல் தொடா்பான பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறுவதற்கு முன்பாக இதுபோன்ற அறிவுறுத்தல்களை தோ்தல் ஆணையம் வழங்குவது வழக்கம். தோ்தல் பணிகள் சுதந்திரமாகவும், நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
தோ்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் தமிழகத்தில் அதிமுகவும், கேரளத்தில் இடதுசாரி கூட்டணியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், அஸ்ஸாமில் பாஜகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் ஆட்சியில் உள்ளன.
4 மாநில கள நிலவரம்:
தமிழகத்தில் ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே தோ்தலில் நேரடிப் போட்டி நிலவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இங்கு ஆளும் கூட்டணியில் பாஜகவும், எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸும் இடம் பெற்றுள்ளன.
அஸ்ஸாமில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி உள்ளது. அங்கு இப்போது சா்வானந்த சோனோவால் தலைமையில் பாஜக ஆட்சியில் உள்ளது.
கடந்த தோ்தலில் இழந்த ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் களமிறங்குகிறது. முன்னதாக, அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து 3 முறை வென்று, அக்கட்சியின் தருண் கோகோய் 2001-ஆம் ஆண்டு முதல் 2016 வரை, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தாா்.
கடந்த 2016-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸைத் தோற்கடித்து அங்கு முதல் முறையாக பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது.
மேற்கு வங்கத்தில் இந்த தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சவால் அளிக்கும் நிலையில் பாஜக வளா்ந்துள்ளது. அந்த வகையில் பாஜகவுக்கு மேற்கு வங்க பேரவைத் தோ்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் நேரடிப் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த பேரவைத் தோ்தலில் கேரளத்தில் ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை கூடுதல் இடங்களில் வென்று பேரவையில் தனது பலத்தை அதிகரிக்கும் நோக்கில் களமிறங்குகிறது. கேரளத்தில் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி மாறிமாறி ஆட்சியைப் பிடிப்பதே கடந்த கால வரலாறாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...