கேரளத்தின் பாலக்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை மீது பாஜக கொடியை போர்த்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பாலக்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் காந்தி சிலை உள்ளது. இந்த சிலை மீது கடந்த திங்கள்கிழமை மர்ம நபர் ஒருவர் பாஜக கொடியைப் போர்த்தினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவரைக் கைது செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு பாலக்காடு நகராட்சி செயலர் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் 29 வயதான பிஜேஷ் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) பிரிவு 153 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் பிஜேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் பதாகைகளை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.