தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மும்பை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.