டிராக்டர் பேரணியில் உண்மைக்கு புறம்பான கருத்துகளைப் பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்பட 6 பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்த நிலையில், காவலர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் டிராக்டர் பேரணியின்போது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட 6 பத்திரிகையாளர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை சார்பில் தேசதுரோக வழக்கு பதிந்துள்ளது.
சர்தேசாய், பாண்டே, ஜோஷ், அனந்த் நாத், பரேஷ் நாத் உள்ளிட்ட 6 பத்திரிகையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிராக்டர் பேரணியின்போது சுட்டுரையின் மூலம் அவர்கள் பதிவிட்ட தகவல்கள் மற்றும் அறிக்கைகள் காவல்துறையினர் மீதும், ராணுவத்தினர் மீதும் கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி விவசாயி ஒருவரை கொன்றதாக சுட்டுரையில் செய்தி பகிரப்பட்டது. எனினும் அவர் டிராக்டர் கவிழ்ந்ததில்படுகாயமடைந்து உயிரிழந்ததாகவும், அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இல்லை என்றும் உடற்கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்கள் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பியதாகவும், அதன் மூலம் பல்வேறு பிரிவினருக்கு இடையே மேலும் பதற்றம் ஏற்பட்டதாகவும் வழக்குப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.