மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
முன்னதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், குழந்தைகள்- பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சௌத்ரி ஆகிய மூவரும் ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், மத்திய சமூகநலத் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவரும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம்
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவை மாற்றப்படவுள்ளது.
பிகாரைச் சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், சுரேஷ் அங்காடி போன்றோர் காலமானது, மத்திய சமூகநலத் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது உள்ளிட்டவற்றால் அமைச்சரவையில் பதவிகள் காலியாக உள்ளன.
இதனால் தற்போது மத்திய அமைச்சரவையில் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த பொறுப்புகளை வகித்துவருகின்றனர்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தில்லியிலுள்ள பிரதமர் இல்லத்திற்கு பாஜக தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்தத் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா தில்லியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.