ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழு ஜூலை 17ஆம் தேதி டோக்கியோ புறப்பட உள்ளதாக இந்திய ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையடுத்து ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகளை ஜப்பான் நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள், பயிற்சியாளர்களைக் கொண்ட குழு ஆயத்தமாகி வருகிறது. ஜூலை 17ஆம் தேதி ஏர் இந்தியா தனிவிமானத்தில் டோக்கியோ புறப்படும் இந்திய அணி ஜப்பான் அரசின் புதிய வழிகாட்டுதலின்படி 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பர் என இந்திய ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய சூழலில் இந்திய ஒலிம்பிக் அணிக்கான பயண ஒப்புதலை ஜப்பான் அரசு வழங்கவில்லை எனவும் விரைவில் ஜப்பான் அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்பதையும் இந்திய ஒலிம்பிக் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.