தொகுதிகள் மறுசீரமைப்பின் மூலம் மக்களவை தொகுதிகளை உயர்த்த பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. முன்னதாக, பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக பதவி வகித்தபோது, மக்களவை தொகுதிகளை 1,000ஆக உயர்த்த பரிந்துரைத்தார்.
தற்போது, 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை தொகுதிகள் அமைந்துள்ளது. ஆனால், சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாடாளுமன்ற தொகுதிகளின் பிரதிநிதித்துவம் மாற்றியமைக்கப்படும் பட்சத்தில் தென் மாநிலங்கள் அதிகம் இழப்பை சந்திக்க நேரிடும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய மக்கள் தொகையின்படி, மறுசீரமைப்பு நடைபெற்றால் தமிழ்நாடு பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தற்போதைய மக்கள் தொகையின்படி மக்களவை தொகுதிகள் மாற்றியமைப்பட்டால், மக்களவையின் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கும் என்பது குறித்து எனது நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார்.
தற்போது, ஒரு தொகுதிக்கு 7.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால், மக்களவை தொகுதிகள் 1200ஆக அதிகரிக்கப்படும். தமிழ்நாடு மிக பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்" என பதிவிட்டுள்ளார்.