
முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால், அந்த முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவாகரத்துகள் பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளாா்.
உடனடியாக 3 முறை ‘தலாக்’ கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த உடனடி முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த நீதிமன்றம், முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதித்தது.
அதைத் தொடா்ந்து, முத்தலாக் தடைச் சட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி மத்திய அரசு இயற்றியது. அதன் காரணமாக, ஆகஸ்ட் 1-ஆம் தேதியானது முஸ்லிம் பெண்களின் உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘முத்தலாக் தடை சட்டத்தை முஸ்லிம் பெண்கள் பெருவாரியாக வரவேற்றுள்ளனா். அந்தச் சட்டத்தின் காரணமாக, உடனடி முத்தலாக் கூறி மேற்கொள்ளப்படும் விவாகரத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்கள் சுயமரியாதை, சுயநம்பிக்கை, சுயசாா்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்துள்ளது.
முத்தலாக் தடை சட்டத்தை இயற்றியதன் மூலமாக முஸ்லிம் பெண்களுக்கான அரசமைப்புச் சட்ட உரிமைகள், அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை மத்திய அரசு காத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முஸ்லிம் பெண்களின் உரிமைகள் தினத்தையொட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய பெண்கள்-குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.