சமூகத்தின் முதுகெலும்பான விவசாயிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அலட்சியப்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சிங்கூர் நில மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2011 கொண்டு வரப்பட்ட நாளை நினைவுகூர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விவசாயிகளின் பிரச்னைகள் குறித்தும் தில்லியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருவது குறித்தும் பேசியுள்ளார்.
விவசாயிகளை சமூகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து போராடுவேன். விவசாயிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதே தனது முன்னுரிமை.
விவசாயிகளுக்காக பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் சிங்கூர் நில மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா 2011 மேற்குவங்க சட்டப்பேரவையில் நீண்ட மற்றும் கடினமான போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. நாங்கள் எங்கள் விவசாயிகளின் உரிமைகளுக்காக ஒற்றுமையாக போராடினோம். இந்த சட்டம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
ஜூன் 14, 2011 அன்று பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி முந்தைய இடது முன்னணி அரசாங்கத்தால் டாடாவுக்கு வழங்கப்பட்ட நிலம் கையப்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தில்லியில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசோ விவசாயிகளை அலட்சியப்படுத்துகிறது. அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.