தேசிய அளவிலான கூட்டணிக்கு விரைவில் பேச்சுவார்த்தை: சஞ்சய் ரௌத்
தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரௌத் இதுகுறித்து கூறியது:
"எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணிக்கான தேவை நாட்டில் உள்ளது. ஆனால், காங்கிரஸ் இல்லாமல் அந்தக் கூட்டணி இருக்காது. அதுதான் பிரதானமாக இருக்கும். தலைமை குறித்து கலந்தாலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
சித்தாந்த ரீதியாக மூன்று வெவ்வேறு கட்சிகள் (சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்) ஒன்றிணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்துள்ளன. தலைமைப் பொறுப்பு உத்தவ் தாக்கரேவிடம் ஒருமனதாக வழங்கப்பட்டது. இதுவொரு சரியான கூட்டணி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய பேரவைத் தேர்தல்களில் அஸ்ஸாம், கேரளம் மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை. கட்சி அங்கு பலப்படுத்தப்பட வேண்டும்.
அரசாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஒரு நாடு தழுவிய கட்சி. இந்த விவகாரங்கள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் இன்னும் சில நாள்களில் தொடங்கப்படும்" என்றார் ரௌத்.