கரோனாவுக்கு மத்தியில் 'யாஸ்' புயல் பெரும் சவால்: ஒடிசா முதல்வர்
கரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், யாஸ் புயல் பெரும் சவாலாக உள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்துள்ளார்.
பேரிடரில் அனைவரது உயிரையும் காக்க வேண்டியது அரசின் கடமையாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து திங்கள்கிழமை காலை புயலாக மாறியது.
இந்தப் புயல் வலுவடைந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா் தீவுகள் இடையே புதன்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மீட்புப் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் தேசிய மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
'யாஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் தடுப்பூசி போடும் பணி, கரோனா பரிசோதனைகள் ஆகியவற்றை மூன்று நாள்களுக்கு மாநில சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய முதல்வர் நவீன் பட்நாயக், ''கரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், 'யாஸ்' புயல் பெரும் சவாலாக உள்ளது.
மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. புயலால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புயலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.