

மீரட்: நாடு முழுவதும் கரோனா தீவிரத் தன்மை மெல்ல குறைந்துவரும் நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த ஒரு குடும்பம், இலவச மருந்தகத்தை தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் ஒட்டுமொத்த குடும்பமும் கரோனாவால் பாதிக்கப்பட, அனைவருக்கும், பல்வேறு மருத்துவர்களும் எழுதிக் கொடுத்த மருந்துகளை அச்சம் காரணமாக வாங்கிக் குவித்துவிட்டனர். தற்போது அனைவரும் கரோனாவிலிருந்து குணமடைந்தும் விட்டனர்.
இது குறித்து அந்தக் குடும்பத்தின் தலைவர் விஜய் பண்டிட் கூறுகையில், ஒரே நேரத்தில் அனைவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைவரும் கலங்கிப் போனோம். ஆயுர்வேதம், அலோபதி, ஹோமியோபதி என அனைத்து மருத்துவர்களிடமும் ஆலோசனைப் பெற்று மருந்துகளை வாங்கினோம்.
தற்போது நாங்கள் அனைவருமே குணமடைந்துவிட்டோம். இப்போது எங்களிடம் நிறைய பயன்படுத்தாத மருந்துகள் இருப்பதைப் பார்த்தோம். நிச்சயம் இது பலருக்கும் உதவும் என்பதால், இலவச மருந்தகத்தைத் திறக்க முடிவு செய்தோம்.
பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டும் மருந்து வாங்க வசதி இருக்காது. அவர்களுக்கு இந்த மருந்துகள் உதவும் என்பதற்காக இதைச் செய்துள்ளோம் என்கிறார். இதுபோல மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தாத மருந்துகளைக் கோரி, இங்கு இல்லாதவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்கிறார் மன நிறைவோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.