
மும்பை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இன்றோடு 13ஆண்டுகள் ஆகின்றன. இதன் நினைவு நாளை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, மும்பை பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட காயங்களை இந்திய மறவாது என்றார். இந்த வழக்கின் விசாரணை விரைவாக நடைபெறுவதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என அந்நாட்டு தூதரை இந்தியா கேட்டு கொண்டுள்ளது.
அதேபோல், பாகிஸ்தான் தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், "தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் இந்தியாவுக்கு எதிராக இயங்கும் பயங்கரவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என அளிக்கப்பட்ட உறுதிமொழியை பின்பற்றுமாறு கேட்டு கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடியோ வெளியிட்டுள்ள மோடி, "புதிய கொள்களைகள் மற்றும் புதிய வழிமுறைகளை கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய போராடிவருகிறது.
மும்பை தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். பல துணிச்சலான காவலர்களும் தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். மும்பை தாக்குதலில் ஏற்பட்ட காயங்களை இந்தியாவால் மறக்க முடியாது" என்றார்.
மும்பை தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று 13 ஆண்டுகளுக்குப் பிறகும், உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளைச் சேர்ந்த 166 பலியானவர்களின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் பாகிஸ்தான் சிறிதும் நேர்மையைக் காட்டவில்லை என்பது ஆழ்ந்த வேதனைக்குரிய விஷயம்.
பாகிஸ்தான் எல்லையில் இந்த பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரட்டை நிலைப்பாட்டை கைவிடுமாறும், கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களை விரைவாக நீதியின் முன் நிறுத்துமாறும் பாகிஸ்தான் அரசாங்கத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.
இது பயங்கரவாதிகளிடம் சிக்கி பலியான அப்பாவிகளின் குடும்பங்களுக்கு நீதியை பெற்று தருவது பாகிஸ்தானின் பொறுப்பு மட்டும் அல்ல. சர்வதேச நாடுகளுக்கும் இதில் கடமை உள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றும் தியாகிகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க இந்தியா தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 13வது ஆண்டு நினைவு நாளில், இந்த கொடூரமான தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் நமது பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த வீரம் மிக்க பாதுகாப்பு வீரர்களை இந்திய அரசாங்கமும் மக்களும் நினைவு கூர்கின்றனர" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரபிக்கடல் வழியாக இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் அடங்கிய குழு, நவம்பர் 26, 2008 அன்று, ஒரு ரயில் நிலையம், இரண்டு சொகுசு விடுதிகள் மற்றும் ஒரு யூத மையம் மீது தாக்குதல் நடத்தியது. ஏறக்குறைய 60 மணி நேரமாக நடைபெற்ற தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.