கிழக்கு லடாக்கில் நடைபெற்ற மோதலுக்கு இந்தியாவே காரணம் என சீனா மீண்டும் குற்றம்சாட்டியிருந்தது. இதை கடுமையாக விமரிசித்த இந்தியா, "சீன ராணுவத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளும் தன்னிச்சையான முயற்சிகள்தான் பிராந்தியத்தின் முன்பிருந்த நிலையை மாற்றி அமைசியை கெடுத்தது" என தெரிவித்துள்ளது.
சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "எல்லை பகுதிகளில் அதிக அளவில் ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் சீனா தொடர்ந்து குவித்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே இந்திய பாதுகாப்பு படை அதற்கு ஏற்றவாறு ராணுவ வீரர்களை நிலைநிறுத்தியது.
நாட்டின் பாதுகாப்பில் இந்திய நலன்களை உறுதி செய்யும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரு தரப்பு ஒப்பந்தங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி இந்திய, சீன எல்லை பகுதிகளில் நிலவும் மீதமுள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண சீன தரப்பு முயற்சிக்கும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு" என்றார்.
இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுவதற்கு மூலக் காரணமே புது தில்லிதான் என்றும் சீனா பகுதிகளை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாகவும் சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அரிந்தம் பாக்சி, "சில நாள்களுக்கு முன்பு, இந்தியா தனது நிலைபாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தது" என்றார்.